Text Link Ads

Wednesday, January 18, 2017

காசநோயிற்கான குறிப்புகள்

  1. காச நோய்
  2. நோய் பரவும் முறை
  3. காச நோயின் அறிகுறிகள்
  4. காச நோய் பற்றி அறிந்து கொள்வதற்கான பரிசோதனை
  5. சிறுபிள்ளைகளில் காசநோய்
  6. நுரையீரலுக்கு தொடர்பில்லாத காசநோய்
  7. அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
  8. காச நோய் - செய்யவேண்டியது மற்றும் செய்யக்கூடாததும்
  9. டாட்ஸ் என்றால் என்ன?

காச நோய்

  1. காச நோய் என்பது ஆங்கிலத்தில் T.B (TUBERCULOSIS) என அழைக்கப்படுகிறது. காச நோய் மைக்ரோ பாக்டிரியம் டியுபர் குளோசிஸ் என்ற கிருமியினால் தொற்றக்கூடிய நோயாகும். இது ஏழை-பணக்காரன், ஆண், பெண், குழந்தைகள் என்ற அனைத்து வயதினரையும் தாக்கக்கூடிய ஒரு நோயாகும். காச நோய் உடலின் எந்த ஒரு பாகத்தையும் தாக்கலாம். காசநோய் முக்கியமாக நுரையீரல், மூளை மற்றும் தண்டுவடத்தை தாக்குகிறது. பெரும்பாலனவர்களிடம் காசநோய் கிருமி உடலில் இருந்தாலும் அது நோயாக மாறுவதில்லை. எச்.ஐ.வி உள்ளவர்களுக்கு காசநோய் தொற்றக்கூடிய வாய்ப்பு மிக அதிகமாகும்.

நோய் பரவும் முறை

இது மைகோபாக்டீரியம் டியூபர்குளோஸிஸ் எனப்படும் பாக்டீரியாவால் தோற்றுவிக்கப்படுகிறது.
காசநோய் கண்ட நபரிலிருந்து காற்றின் மூலம் இந்நோய் மற்ற நபர்களுக்கு பரவுகிறது. இந்நோய் கண்ட நபர் மூலம், ஒரு வருடத்தில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட நபருக்கு இந்நோய் தொற்றும்.

காச நோயின் அறிகுறிகள்

  • விட்டு விட்டு காய்ச்சல்
  • மூன்று வாரம் அல்லது அதற்கும் அதிகமான வாரங்கள் இடைவிடாத இருமல்
  • சுவாசிப்பதில் பிரச்சனை

காச நோய் பற்றி அறிந்து கொள்வதற்கான பரிசோதனை

  1. சளி பரிசோதனை
  2. மார்பக எக்ஸ்ரே பரிசோதனை
  3. மாண்டோ (MANTOUX) பரிசோதனை
மேற்கூறிய பரிசோதனைகள் அனைத்தும் அரசு காசநோய் தடுப்பு சிகிச்சை மையங்கள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் தாலுக்கா மருத்துவமனைகளில் உள்ளன.சளி நுண்ணோக்கிப் (SPUTUM MEROSCOPIC) பரிசோதனை திருத்தப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாடு திட்ட (RNTCP) மையங்களில் செயல்படுகிறது.
மைக்ரோஸ் கோபிக் மையங்கள் அனைத்து மாவட்டங்களிலும்,ஒவ்வொரு ஒரு லட்சம் பேருக்கு ஒரு மையம் என்ற விகிதத்தில் அமைக்கப்பட்டு செயல்படுகிறது.
ஒவ்வொரு மையத்திலும் சளி (SPUTUM) பரிசோதனை செய்வதற்கு பயிற்சி பெற்ற ஆய்வக நுட்பநர் உள்ளார்.
இன்று எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டவர் இறப்பதற்கு காரணமான முக்கிய நோய் காச நோய், எச்.ஐ.வி கிருமி உள்ளவர்களது உடல் நிலை எந்த நோயாக இருந்தாலும் உடன் எவ்வித எதிர்ப்பும் இன்றி ஏற்றுக் கொள்ளும். எனவேதான் எச்.ஐ.வி உள்ளவர்களுக்கு எளிதில் காச நோய் தொற்றுகிறது. மேலும், காசநோய், எச்.ஐ.வி கிருமிகளின் உற்பத்தியை அதிகப்படுத்துவதாகவும் கருதப்படுகிறது. ஆகவே எச்.ஐ.வி கிருமிகள் பெருகும் நிகழ்வும் நடைபெறுகிறது. எனவே எச்.ஐ.வி உள்ளவர்கள் காச நோய் பற்றி எச்சரிக்கையாக இருப்பது மிகவும் முக்கியமாகும். காச நோய்க்கான அறிகுறிகள் இருப்பின் உடனடியாக தேவையான பரிசோதனைகளைச் செய்து காசநோய் இருக்கிறதா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். காசநோய் இருந்தால் முறையாக டாட்ஸ் (DOTS) சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின் படி சிகிச்சை முடியும்வரை தொடர வேண்டும். HIV உள்ளோர்க்கு வரும் காசநோயைத் தகுந்த சிகிச்சையின் மூலம் முற்றிலும் குணப்படுத்த முடியும்.

சிறுபிள்ளைகளில் காசநோய்

  • சிறுபிள்ளைகளில் காசநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்
  • கீழ்கண்ட சூழலில் வாழும் சில குழந்தைகளில், காசநோய் மற்றவர்களை விட அதிக அளவில் தொற்றக்கூடிய அபாயம் உண்டு
- காசநோயின் தாக்கம் அதிகம் உள்ள நபர்கள் வசிக்கும் வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு.
- எச்.ஐ.வி அல்லது மற்ற நோய் தடுப்பு தன்மையை குறைக்கும் நோய்தொற்று கொண்ட சிறு பிள்ளைகள்
- மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள சமூகசூழ்நிலையில் உள்ள சிறு பிள்ளைகள்.

நுரையீரலுக்கு தொடர்பில்லாத காசநோய்

(எக்ஸ்ட்ரா பல்மோனரி டியூபர்குளோசிஸ்)
எக்ஸ்ட்ரா பல்மோனரி காசநோய் என்பது நுரையீரல் அல்லாத மற்ற பகுதிகளில் ஏற்படும் காசநோயினைக் குறிக்கிறது.
அறிகுறிகள்
நோய்தொற்று கொண்ட குறிப்பிட்ட பகுதி (நிணநீர்ச்சுரப்பிக் கணுக்கள்-லிம்ஸ்ப்நோட்ஸில் காசநோய்) வீக்கமடைதல், நடமாடும் திறன் குறைதல் (முதுகெலும்பு கூர்முனை-ஸ்பைனில் காசநோய்) அல்லது கடுமையான தலைவலி மற்றும் நரம்புசம்பந்தமான குறைசெயல்பாடு (டி.பி. மெனிஞ்ஜைடிஸ்) போன்றவையாகும்.
எக்ஸ்ட்ரா பல்மோனரி டிபி-யில் இருமல் இருக்காது ஏனெனில் இது நுரையீரலில் ஏற்படுவது இல்லை.
நோய் பரவும் முறை:
  • முதன்மை நோய்த்தொற்றின் போது, இந்நோய்பரப்பும் பாக்டீரியா இரத்தம் மற்றும் நிணநீர் மண்டலம் மூலம் நுரையீரல் அல்லாத மற்ற பகுதிகளுக்கு பரவுகிறது. நோய் தொற்று கண்ட நபரின் உடலில், நோய் எதிர்ப்பு சக்தி போதுமானதாக இருப்பின், இந்நோய்கிருமிகள் அழிக்கப்படுகின்றன. நோய்தொற்று கண்ட நபரின் உடலில், நோய் எதிர்ப்பு திறன் குறைபாடு இருப்பின், இவ்வகை பாக்டீரியாக்கள் குறிப்பிட்ட பகுதிகளில் தங்கிவிடுகின்றன. இந்நோயினை தோற்றுவிப்பதற்கு முன்பு, சில மாதங்கள் முதல் வருடங்கள் வரை, தங்கள் இனப்பெருக்கத்தினை பாக்டீரியாக்கள் செய்து கொள்கின்றன.
  • இருமல் மூலம், நுரையீரலில் உள்ள பாக்டீரியாக்கள் சளி வழியாக வெளிவரும். அப்படி வரும் சளியினை விழுங்கும் போது, கழுத்துபகுதியில் உள்ள நிணநீர் நாளமுடிச்சுக்கள் மற்றும் வயிறு, குடல் போன்ற பகுதிகளுக்குள் பாக்டீரியாக்கள் செல்கின்றன.
  • நோய் தொற்று கண்ட விலங்குகளின் பாலில் உள்ள மைக்கோபாக்டீரியம் போவிஸ் எனும் நோய் கிருமிகளால் பாலின் மூலம் இந்நோய் மனிதர்களுக்கு பரவுகிறது.
இந்நோய் தொற்று ஏற்படும் பொதுவான பகுதிகள்
  • நிணநீர் முடிச்சுகள் மற்றும் சீழுடன் உள்ள கட்டிகள் -குறிப்பாக கழுத்தை சுற்றியுள்ள பகுதிகள்.
  • எலும்பு மற்றும் மூட்டுக்கள்-இப்பகுதி பாதிப்பு ஏற்பட்டால், நோயாளிகளில் பாதிப்பேருக்கு முதுகெலும்பு முற்பகுதி பாதிக்கப்படுகிறது.
  • பெண்களில் கர்ப்பப் பை, ஆண்களில் விதைப்பையில் உள்ள எபிடிடைமிஸ் எனப்படும் இனப்பெருக்க உறுப்பு பகுதி பாதிக்கப்படுகிறது. இருபாலரிலும், சிறுநீரகம், சிறுநீரகக்குழாய்கள் அல்லது சிறுநீர்ப்பை நோய் பாதிக்கிறது.
  • வயிறு, குடல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பெரிடோனியம் எனப்படும் சவ்வுப்பகுதி பாதிக்கப்படலாம்.
  • மூளை பகுதி (மெனிஞ்ஜைடிஸ்) - பாதிப்பு சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால், விரைவில் மரணத்தைத் தோற்றுவிக்கும்.
  • பெரிகார்டியம் (இதய உறை) - பாதிக்கப்படும் போது, இதயம் சுருக்கமடையச் செய்கிறது.
  • தோல்- பாதிப்பு பல வடிவங்களில் ஏற்படும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

காச நோய் ஏற்பட காரணம் என்ன?
காச நோய் ஒரு பரம்பரை வியாதி அல்ல. இது ஒரு தொற்று வியாதி. எந்த மனிதர் வேண்டுமானாலும் காச நோயால் பாதிக்கப்படலாம். காச நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் வாய்மூடாமல் தும்மினாலோ அல்லது இருமினாலோ காச நோய் ஏற்படுத்தும் கிருமிகள் காற்றில் வெளிப்படுகின்றன. இப்படி பாதிக்கப்பட்ட காற்றை சுவாசிக்கும் யாரை வேண்டுமானாலும் பாதிக்கும். ஒருவரின் உடலில் சென்ற காச நோய் கிருமி காச நோயை ஏற்படுத்தாது. உடலில் செயல் இழந்த காசநோய் கிருமி உள்ளோர் உடனே நோய்வாய்படுவதில்லை. அவர்களுக்கு காசநோய்க்கான அறிகுறிகள் எதுவும் இருக்காது. மேலும், நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பொழுது செயலிழந்து இருக்கும் காசநோய் கிருமிகள் செயல்படத் தொடங்கிவிடும். ஆகவேதான் எச்.ஐ.வி உள்ளவர்களுக்கு காசநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.
இந்த நோயின் அறிகுறிகள் என்ன?
காச நோயின் குறிப்பான அறிகுறிகள், மூன்று வாரத்திற்கு மேல் தொடரும் இருமல், சளியுடன் கூடிய இருமல், காய்ச்சல், எடை குறைவு அல்லது பசியின்மை போன்றவை ஆகும். மேற்கூறிய ஏதாவது அறிகுறி ஒருவருக்கு மூன்று வாரதிற்கு மேல் நீடித்தால், அவர் அருகிலிருக்கும் டாட்ஸ் காச நோய் மையம், அல்லது சுகாதார மையத்திற்கு சென்று சளியை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
காச நோயை கண்டு பிடிக்க எத்தகைய பரிசோதனைகள் செய்ய வேண்டும், மற்றும் அவை எங்கு செய்யப்படும்?
காச நோயை கண்டுபிடிக்க சளியில் காசநோய்க்கான கிருமி உள்ளதா என்று தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு பரிசோதிக்க வேண்டும். நாட்டின் பகுதிகளில் டாட்ஸ் மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் அளிக்கப்படும் சேவைகள் அனைத்தும் முற்றிலும் இலவசம்.
நன்றாக இருமிய பின் வரும் சளியைதான் பரிசோதனைக்கு தரவேண்டும். முக்கியமாக சளிக்கு பதிலாக உமிழ் நீரை தரக்கூடாது. பரிசோதனைக்கு உமிழ் நீரை தந்தால் நோயை கண்டுபிடிக்க முடியாது.
காச நோய்க்கான சிகிச்சை என்ன?
காச நோய் எதிர்ப்பு மருந்துகளை தொடர்ந்து முழு சிகிச்சை காலத்திற்கு எடுத்துகொண்டால் இந்த நோய் முழுமையாக குணமடையக்கூடியது. காச நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி, குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு தொடர்ச்சியாக மருந்து எடுத்துகொள்ள வேண்டும். சில நோயாளிகளுக்கு மருந்துகளை ஒரு வருடத்திற்கு கூட தொடர வேண்டிய நிலை வரலாம். முக்கியமாக மருத்துவரின் ஆலோசனைப்படி தான் மருந்துகளை நிறுத்த வேண்டும். முழுமையான அல்லது தொடர்ச்சியாக சிகிச்சை எடுத்து கொள்ளாத நோயாளிகளுக்கு இந்த நோய் உயிருக்கு ஆபத்தானதாகவோ அல்லது குணப்படுத்த முடியாததாகவோ மாறிவிடும்.
இந்த காச நோய் குணப்படுத்தகூடியதா?
தேவையான காலங்களுக்கு, முறையாகவும் மற்றும் தொடர்ச்சியாகவும் சிகிச்சையை எடுத்துகொண்டால் இந்த நோய் முழுமயாக குணமடையக்கூடியதே. காச நோய் கிருமிகளை முற்றிலுமாக கட்டுப்படுத்த பல்வேறு வகையான நுண்ணுயிர்க் கொல்லி / கட்டுப்படுத்தும் மருந்துகள் தேவைப்படுகிறது. காசநோய்க் கிருமிகள் படிப்படியாகத்தான் அழிக்கப்படுகிறது. எனவே குறிப்பிட்ட காலம் வரையிலும் கொடுக்கப்படும் மருந்துகளை உட்கொள்வது மிகவும் அவசியமாகும். மருந்து உட்கொண்ட சில வாரங்களில் உடல் நன்றாக குணமடைய தொடங்கும். அப்பொழுது இடையில் மருத்துவ சிகிச்சையை நிறுத்துவதால் உடலிலுள்ள காசநோய்க் கிருமிகள் முற்றிலும் அழிக்கப்படுவதில்லை. ஆகவே, மருத்துவ சிகிச்சை முழுமையாக மேற்கொள்வது மிகவும் அவசியம். எனவே நோயாளி தொடர்ந்து மருந்து உட்கொள்வதை மற்றவர் மேற்பார்வையிடும் ஒரு மருத்துவ சிகிச்சை முறை தற்பொழுது நடைமுறையில் உள்ளது. இது ஆங்கிலத்தில் டாட்ஸ் (DOTS) என்று அழைக்கப்படுகிறது. இந்த DOTS மருத்துவ சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுகிறது.
காச நோயை எவ்வாறு தவிர்க்கலாம்?
காச நோயாளி வாயை மூடாமல் இருமினாலோ அல்லது தும்மினாலோ, அல்லது அங்கங்கு துப்பினாலோ,அவர்களின் எச்சில் மூலம் காச நோய் பரவுகிறது. அதனால் நோயாளிகள் இருமும்பொழுதும் அல்லது தும்மும்போதும் எப்போதும் முகத்தை மூடிக் கொள்ள வேண்டும்.
நோயாளிகள் அங்கங்கு துப்பக்கூடாது மற்றும் இருமும் போது கைக்குள் ஸ்பிடூன் வைத்து கொள்ள வேண்டும். வீட்டிலும் நோயாளிகள் மூடி உள்ள தொட்டியில் தான் துப்பவேண்டும்.
காச நோயின் அறிகுறிகள் ஒருவருக்கு தோன்றினால், அதை கண்டு பயப்படாமல் இருப்பதும், நோயை மறைக்காமல் இருப்பதும் மிக முக்கியம். குறிப்பிட்ட நபர் தன்னை பரிசோதித்த கொள்வதும் தேவையான ஓய்வு எடுத்து கொள்வதும் அவசியம்.
காச நோயாளிக்கு தரவேண்டிய உணவு என்ன?
காச நோயாளிகள் தங்களுக்கு பிடித்த எந்த வகை உணவையும் சாப்பிடலாம். காச நோயாளிக்கு எவ்வித வித்தியாசமான உணவுகளும் தேவையில்லை. குறிப்பிட்ட நபருக்கு பிரச்சனை தரக்கூடிய எந்த உணவையும் தவிர்க்கவேண்டும்.
காசநோயாளிகள் தவிர்க்க வேண்டிய பொருள்கள் என்ன?
காச நோயாளி, பீடி, சிகரெட், புகையிலை, மதுபானம் அல்லது மற்ற போதை தரக்கூடிய பொருட்கள் உட்கொள்வதை தவிர்க்கவேண்டும்.குளிர்ச்சியான பொருட்களை தவிர்த்தல் வேண்டும்.

காச நோய் - செய்யவேண்டியது மற்றும் செய்யக்கூடாததும்

செய்யவேண்டியது.
  • மூன்று வாரங்களோ அல்லது அதற்கு மேலும் தொடர்ந்து இருமல் இருந்தால் சளி பரிசோதனை செய்யவேண்டும்.இந்த பரிசோதனை இலவசமாக அரசு சளி நுண்ணுயிர் மையத்தில் செய்யப்படும்.
  • அனைத்து மருந்துகளையும் தொடர்ந்து முழுகால அளவுகளுக்கு எடுக்கவேண்டும்.
  • டி.பி. குணப்படுத்தக்கூடியது என்பதை புரிந்து கொள்ளவும்.
  • தும்மல் மற்றும் இருமல் ஏற்படும் பொழுது கைக்குட்டையை உபயோகப்படுத்தவும்.
செய்யக்கூடாதவை
  • மூன்று வாரங்களோ அல்லது அதற்கு மேலும் தொடர்ந்து இருமல் இருந்தால் மருத்துவ உதவியை தவிர்க்க கூடாது.
  • டி.பி.-யை கண்டுபிடிக்க எக்ஸ்ரேயை மட்டும் சார்ந்து இருக்கக்கூடாது.
  • மருத்துவர் அனுமதியில்லாமல் மருந்துகளை நிறுத்தக்கூடாது.
  • டி.பி. நோயாளிகளிடம் பாகுபாடு காட்டக்கூடாது.
  • கண்ட இடங்களில் எச்சில் துப்பக்கூடாது.

டாட்ஸ் என்றால் என்ன?

டாட்ஸ் என்பது குறுகிய கால நேரடி கவனிப்பு பரிசேதனையாகும். டி.பி.-யை கண்டுபிடிக்கவும் குணப்படுத்தவும் உலகெங்கும் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் இது சிறப்பான வழிமுறையாக பெயர் பெற்றது. இது ஐந்து உட்கூறுகளை உள்ளடக்கியது:
  • தேசிய காசநோய் கட்டுபாடு திட்டத்திற்கான அரசியல் உறுதிமொழி
  • நுரையீரல் காசநோயின் அறிகுறிகளுடன், மிக முக்கியமாக தொடர்ந்து மூன்று வாரங்கள் அல்லது அதற்கு மேல் இருமலுடன், சுகாதார மையங்களுக்கு வரும் நோயாளிகளுக்கு தொற்றுகிருமிகளை கண்டறியும் நுண்ணோக்கி பரிசோதனை மையம்.
  • தடையில்லாமல் தொடர்ந்து காச நோய் எதிர்ப்பு மருந்து வழங்குதல். எதிர்பார்க்கதக்க, உயர்தர காசநோய் எதிர்ப்பு மருந்துகளை சுகாதார மையங்கள் மூலம் காச நோயாளிக்கு தடையில்லாமல் தொடர்ந்து கிடைக்கச் செய்வதின் உருவாக்கம்தான் டாட்ஸ் செயல்முறையின் முக்கிய அம்சமாகும்.
  • குறைந்தபட்சம், ஆரம்பக்கட்ட சிகிச்சையின் பொழுது நேரடியான கண்காணிப்பு, சுகாதார ஊழியர்கள் நோயளிகள் மிகவும் சக்திவாய்ந்த கூட்டு மருந்துகளை தொடர்ந்து விழுங்குவதை கவனிப்பது மற்றும் ஆலோசனை அளிப்பது போன்றவை டாட்ஸ் செயல்முறையின் பகுதியாகும்.
  • கண்காணிப்பது, மற்றும் நம்பகத்தன்மை முறைகள் - நோய் கண்டறியப்பட்ட ஒவ்வொரு நோயாளியின் சிகிச்சையை மதிப்பிடுவதும் மற்றும் திட்டமேற்பார்வைகாக
டாட்ஸ் முறையின் சிறப்புகள் என்ன?
  • டாட்ஸ் 95 சதவிதம் நோயாளிகளை குணமாக்குகிறது.
  • வியாதியிலிருந்து நிச்சயமாகவும் விரைவாகவும் குணமடைய டாட்ஸ் உறுதி அளிக்கிறது.
  • இந்தியாவில் 17 இலட்சம் நோயாளிகளின் வாழ்க்கையை டாட்ஸ் மாற்றியுள்ளது.
  • வறுமையை அகற்றவும், உயிர்களை காக்கவும் நோயின் கால அளவை குறைக்கவும் டாட்ஸ் ஒரு சிறப்பான வழிமுறையாகும். மேலும் சில ஆண்டுகளுக்கு வேலை வாய்ப்பு இழப்பை ஏற்படுத்தும் புதிய தொற்று நோய்களையும் தடுக்க உதவுகிறது.
  • எச்.ஐ.வி.-யால் பாதிக்கப்பட்ட காசநோயாளிகளின் வாழ் நாளை டாட்ஸ் நீட்டிக்கிறது.
  • டாட்ஸ், நோயாளிக்கு தடையில்லாமல் காசநோய் எதிர்ப்பு மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வதுடன், நோயாளிகளின் ஒத்துழைப்பை பெறுவதன் மூலம், சிகிச்சை பலன் அளிக்காமல் போவதை தடுப்பதுடன், பன்மருந்து எதிர்ப்பு காசநோய் எற்படுவதையும் தவிர்கிறது.
  • டாட்ஸ் உடல் நல சேவைகள் சென்றடைவதை அதிகப்படுத்துகிறது. இந்த டாட்ஸ் வழிமுறைகள் வெளிப்புற உடல் நல சேவைகள் மேம்பாட்டை ஊக்குவிக்க மிகவும் வெற்றிகரமானதாக உள்ளது.
  • டாட்ஸ் இலவசமாக அனைத்து சுகாதார நிலையங்களிலும் கிடைக்கிறது.
மருந்து எதிர்ப்பு காசநோய் என்றால் என்ன?
சாதாரன காசநோய்க்கு கொடுக்கப்படும் வழக்கமான நோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு குணம் அடையா உருவாகும் ‘மருந்து. எதிர்ப்பு காசநோய்’ தான், மிகவும் முக்கிய பிரச்சனையாக உள்ளது. நோயாளிகள் தொடர்ச்சியற்ற மற்றும் முழுமையடையாத சிகிச்சை முறைகள்தான் மருந்து எதிர்ப்பு ஏற்படுவதற்கான காரணமாக அமைகிறது. தொடர்ச்சியாகவும் முழுகாலஅளவும் காசநோய் எதிர்ப்பு மருந்தை சாப்பிடுவதன் மூலம் எம்.டி.ஆர். காசநோயை தவிர்கலாம். இந்த வகை காசநோய் மிகவும் செலவுமிக்கது. மேலும் இது பயனளிக்காமல் போவதுடன் சிகிச்சையின் காலகட்டம் 2 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கப்படலாம்.
டி.பி. மற்றும் ஹச். ஐ. வி. க்கான உறவுநிலை எப்படிபட்டது?
யாருக்கு வேண்டுமானாலும் காசநோய் தொற்று ஏற்படலாம். ஹச்.ஐ.வி உள்ள மனிதர்கள் காச நோயால் அவதிப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எச். ஐ. வி.-யால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பொழுது இந்த பாக்டீரியா வளர்ந்து பன்மடங்காகலாம். இது காச நோய் வியாதியாக மாற்றமடைகிறது.

Tuesday, January 3, 2017

மனிதனை நலமாக்குவது ஹோமியோபதி: ஆபத்தான நிணநீர்ச் சுரப்பி வீக்கம் (புற்று) மற்றும் தொண்டை அழற்சி

மனிதனை நலமாக்குவது ஹோமியோபதி: ஆபத்தான நிணநீர்ச் சுரப்பி வீக்கம் (புற்று) மற்றும் தொண்டை அழற்சி





டான்சில் வீங்குவது ஏன்?

டான்சில் வீங்குவது ஏன்?: டான்சில் வீக்கத்துக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமா, வேண்டாமா என பெற்றோர்கள் குழம்பிப் போகிறார்கள்.





டான்சில் என்பது தொண்டையில் ஏற்படும் சதை வளர்ச்சி. தொண்டையில் சதை வீங்குவதை டான்சில் என்று மக்கள் பொதுவாகப் புரிந்துவைத்திருக்கிறார்கள். ஐஸ்கிரீம் சாப்பிட்டால் டான்சில் தொல்லை தரும் என்று தெரிந்துவைத்திருக்கிறார்கள். இதைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.
டான்சில் என்பது ஒரு நிணநீர்ச் சுரப்பி. இது இயற்கையாகவே நம் வாய்க்குள் மூன்று இடங்களில் உள்ளது. தொண்டையில் உள்நாக்குக்கு இரண்டு புறமும் உள்ள டான்சில், நாக்குக்கு அடியில் உள்ள டான்சில், மூக்குக்குப் பின்னால் உள்ள டான்சில் என மூன்று வகைப்படும். இவை நம் சுவாசப் பாதைக்கும் உணவுப் பாதைக்கும் ஒரு பாதுகாப்பு வளையமாகச் செயல்படுகின்றன.
தொண்டை டான்சில்
நாம் உணவு சாப்பிடும்போதும் தண்ணீர் குடிக்கும்போதும் கிருமியோ, வேண்டாத உணவோ அல்லது புதிதாக ஒரு பொருளோ உடலின் உள்ளே போகும்போது, அவற்றிலிருந்து துளியளவு ‘சாம்பிள்’எடுத்து ஆராய்ந்து, அது பற்றிய தகவல்களை உடனே மூளைக்குத் தெரிவிக்கிற வேலையைத் தொண்டையில் உள்ள டான்சில்கள் செய்கின்றன. அதாவது, ஒரு வாயிற்காவலர் அலுவலகத்துக்கு வரும் நபரைத் தீர விசாரித்து, அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் `இன்னமாதிரியான ஆள் உள்ளே வருகிறார்’ என்ற தகவலைச் சொல்லி, உள்ளே அனுப்புவது போல், டான்சில்களும் ஒரு பாதுகாப்பு ஏற்பாட்டை நம் உடலில் செய்கின்றன. வந்திருக்கிற கிருமிக்கு நம்முடைய உடலில் எதிர்ப்புச் சக்தியை ஏற்படுத்த இது உதவுகிறது.
டான்சில் வீங்குவது ஏன்?
சில சமயங்களில் கிருமிகளை ஆராயும்போது, அந்தக் கிருமிகள் மிகவும் பலம் வாய்ந்ததாக இருக்குமானால், முதலில் டான்சில்கள் அந்தக் கிருமிகளால் பாதிக்கப்பட்டுவிடும். காய்ச்சல், தடுமம் பிடிக்க ஆரம்பிக்கும், முன்பக்கத் தொண்டை வலிப்பது இதனால்தான். டான்சில் திசுக்கள் தொடர்ந்து இந்தக் கிருமிகளோடு போராடும்போது, தொண்டையில் இரண்டு பக்கமும் உள்ள டான்சில்கள் ஒட்டுமொத்தமாக வீங்கிவிடும். இதைத்தான் ‘டான்சில் அழற்சி’ (Tonsillitis ) என்கிறோம்.
இப்படி டான்சில்கள் வீங்குவதற்குப் பொதுவான காரணம் ‘பீட்டா ஹீமோலைட்டிக் ஸ்ட்ரெப்டோகாகஸ்’எனும் பாக்டீரியா கிருமிதான். இதைத் தவிர, அடினோ வைரஸ், ஃபுளூ வைரஸ், டிப்தீரியா, பாக்டீரியா போன்ற கிருமிகளின் தாக்கத்தாலும் இப்படி ஏற்படலாம்.
யாருக்குப் பாதிப்பு அதிகம்?
பதினைந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு டான்சில் பாதிப்பு அதிகம் ஏற்படும். அடிக்கடி சளி, ஜலதோஷம், சைனஸ், நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களுக்கு, ஊட்டச்சத்துக் குறைந்தவர்களுக்கு, காற்றுப் போக வழியில்லாமல் மிகவும் நெருக்கமான இடங்களில் வசிப்பவர்களுக்கு, மாசடைந்த காற்றைச் சுவாசிப்பவர்களுக்கு டான்சில் வீக்கம் அதிகமாகத் தொல்லை தரும்.
ஐஸ்கிரீம், குச்சி ஐஸ், ஃபிரிட்ஜிலிருந்து உடனே எடுத்துச் சாப்பிடப்படும் பதார்த்தங்கள், குளிர்பானங்கள், குளிர்ச்சியான தட்பவெப்பநிலை போன்றவை டான்சில் வீக்கத்துக்குத் துணை செய்யும். மிகவும் குளிர்ச்சியான பொருட்களைச் சாப்பிடும்போது, அந்தப் பொருட்களின் அதீத குளிர்ச்சியானது டான்சில் ரத்தக் குழாய்களைச் சுருங்கச் செய்துவிடும். இது டான்சில்களின் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைத்துவிடும். அப்போது கிருமிகள் பலம் பெற்று டான்சில்களைத் தாக்கிவிடும். இதன்விளைவாக டான்சில்கள் வீங்கிவிடும்.
வீக்கத்தில் இரண்டு வகை
டான்சில் வீக்கம் இரண்டு வகைப்படும். ஒன்று, ‘திடீர் டான்சில் வீக்கம்’ (Acute Tonsillitis). மற்றொன்று, ‘நாட்பட்ட டான்சில் வீக்கம்’ (Chronic Tonsillitis) . முதலாம் வகையில் தொண்டை வலி, காய்ச்சல், தலைவலி, உடல்வலி, குமட்டல், வாந்தி, இருமல், உணவை விழுங்கும்போது வலி, காது வலி போன்ற அறிகுறிகள் காணப்படும். சிலருக்குக் கழுத்தில் நெரி கட்டும். இவர்களுக்கு ஆரம்பத்திலேயே தகுந்த ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளை முறையாகக் கொடுத்துவிட்டால், பாதிப்பு முற்றிலும் குணமாகிவிடும்.
முதல்முறையாக டான்சில்கள் வீங்கும்போது சரியானமுறையில் சிகிச்சை பெறாதவர்களுக்கும் தற்காப்பு நடவடிக்கை களை எடுக்கத் தவறியவர்களுக்கும் டான்சில் பாதிப்பு அடிக்கடி ஏற்படும். அப்போது டான்சில்களின் நோய் எதிர்ப்புச் சக்தியானது நிரந்தரமாகவே குறைந்துவிடுவதால், கிருமிகளின் பாதிப்பும் நிரந்தரமாகிவிடும். அதனால் டான்சில் வீக்கம் நீடிக்கும். இதை ‘நாட்பட்ட டான்சில் வீக்கம்’ என்று சொல்கிறோம்.
என்ன ஆபத்து?
நாட்பட்ட டான்சில் வீக்கத்தால் அடிக்கடி காய்ச்சல் வரும். தொண்டை வலி நிரந்தரமாகிவிடும். பசி குறையும். குழந்தையின் எடை குறையும். டான்சிலில் சீழ் பிடித்து வாய் நாற்றம் ஏற்படும். காதில் சீழ் வடியும். கேட்கும் திறன் குறையும். கழுத்தில் நெறிகட்டுதல் நிரந்தரமாகிவிடும். சைனஸ் தொல்லை நீடிக்கும். இதனால் தலைவலி அடிக்கடி வரும். சிறு குழந்தைகளும் குறட்டை விடும். குரல் கரகரப்பாக மாறிவிடும். மேலும், டான்சிலில் குடியிருக்கும் கிருமிகள் சில நச்சுப் பொருட்களை வெளிவிடும். இவை ரத்த ஓட்டத்தில் கலந்து உடலுக்குள் ‘சுற்றுலா’ செல்லும். இதனால் சிறுநீரகம், எலும்பு மூட்டுகள், இதயம், நுரையீரல் போன்றவை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
அடினாய்டு டான்சில்
மூக்கில் உள்ள டான்சிலை ‘அடினாய்டு டான்சில்’ (Adenoid Tonsil) என்கிறோம். மூக்கு வழியாக வரும் காற்றில் உள்ள கிருமிகளை அடையாளம் காணும் வேலையை இந்த அடினாய்டு டான்சில் செய்கிறது. பிறந்த குழந்தை வளர வளர அடினாய்டு டான்சிலும் வளர்ந்துகொண்டே வரும். ஏழு வயதை நெருங்கும்போது இது சற்றுப் பெரிதாகவே காணப்படும். அப்போது பலம் வாய்ந்த கிருமிகளால் தாக்கப் படுமானால், இது வீங்கி மூக்கின் பாதையை அடைத்துவிடும். அப்போது குழந்தைகள் வாய் வழியாகச் சுவாசிக்க ஆரம்பிப்பார்கள். இப்படி வாய் வழியாகச் சுவாசிப்பதால், இவர்களுக்குப் பற்கள் துருத்திக்கொண்டு வளர ஆரம்பிக்கும். தெற்றுப் பற்கள் உண்டாகும்.
சிகிச்சை என்ன?
திடீர் டான்சில் வீக்கத்தை மருந்து, மாத்திரைகள் மூலம் குணப்படுத்திவிடலாம். நாட்பட்ட வீக்கத்துக்கு ஆபரேஷன்தான் கைகொடுக்கும். இப்போது லேசர் சிகிச்சை அல்லது ‘ரேடியோ ஃபிரீகுவன்சி அப்லேசன்’ (Radio frequency ablation) எனும் நவீன சிகிச்சையில் துளியளவு ரத்தம்கூட சிந்தாமல், வலியே இல்லாமல், மிக துல்லியமாக டான்சில்களை அகற்றமுடியும். இந்தச் சிகிச்சைக்குப் பிறகு பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் டான்சில் பிரச்சினை வருவதில்லை.
அறுவை சிகிச்சை தேவையா?
டான்சில் வீக்கத்துக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமா, வேண்டாமா என பெற்றோர்கள் குழம்பிப் போகிறார்கள். ஒரு உதாரணம் சொல்கிறேன். கோட்டைக்குக் காவல்காரன் தேவைதான். காவல்காரனே ஒற்றனாக மாறிவிட்டால், அந்தக் காவல்காரனை அரசன் வேலைக்கு வைத்திருப்பானா? அடுத்த நிமிடம் வெளியேற்றிவிடுவான்தானே? அது மாதிரிதான், அடிக்கடி தொல்லை கொடுக்கும் டான்சில் வீக்கத்துக்கு அறுவை சிகிச்சைதான் சரியான தீர்வு.
அறுவை சிகிச்சை எப்போது தேவை என்பதை இங்கே சொல்லிவிடலாம். ஆண்டுக்கு மூன்று முறைக்கு மேல் டான்சில் பிரச்சினை ஏற்படுதல், டான்சில் பாதித்த குழந்தைக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படுவது, அடிக்கடி வாந்தி எடுப்பது, சாப்பிட முடியாத நிலைமை, உடல் எடை குறைவது, டான்சில் வீக்கத்தில் சீழ் பிடிப்பது, அடிக்கடி காதுவலி, காதில் சீழ், காது கேட்பது குறைவது, வாய்வழியாக மூச்சுவிடுவது, குறட்டை விடுவது போன்ற பிரச்சினைகள் தொடரும்போது அறுவை சிகிச்சை அவசியம்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடுமா?
டான்சில் அறுவை சிகிச்சைக்குப் பின் குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாமல் போய்விடும் என்று பயப்படத் தேவையில்லை. காரணம், குழந்தைக்கு 5 வயதாகும் வரைதான் நோய்ப் பாதுகாப்புப் பணியில் டான்சில்கள் பிரதானமாகப் பங்களிக்கின்றன. அதற்குப் பிறகு உடலில் உள்ள மற்ற நிணநீர்ச் சுரப்பிகள் இந்தப் பாதுகாப்பு வேலையைப் பகிர்ந்துகொள்கின்றன. ஆகவே, டான்சில் களை அகற்றிவிட்டாலும் குழந்தைக்கு எப்போதும்போல் நோய் எதிர்ப்புச் சக்தி இருக்கும்.
தடுப்பது எப்படி?
# இளம் சூடான தண்ணீரில் சிறிதளவு சமையல் உப்பைக் கலந்து காலையில் எழுந்ததும் ஒருமுறை, இரவில் படுக்கச் செல்லும்போது ஒருமுறை வாயைக் கொப்பளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால் டான்சில் பிரச்சினை குறையும்.
# எப்போதும் சுத்தமான குடிநீரைக் குடிக்க வேண்டும். சுத்தமான உணவைச் சாப்பிட வேண்டும். முக்கியமாக, திறந்தவெளிக் கடைகளிலும் சாலையோரக் கடைகளிலும் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
# ஐஸ்கிரீம் உள்ளிட்ட மிகவும் குளிர்ச்சியான உணவு வகைகளையும் குளிர்பானங்களையும் தவிர்க்க வேண்டும்.
# மிகவும் சூடான, காரமான உணவு வகைகளும் வேண்டாம்.
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்
தொடர்புக்கு: gganesan95@gmail.com
Keywords: டான்சில் நோய்சதை வளர்ச்சிநிணநீர்ச் சுரப்பிடான்சில் சிகிச்சைஏன் தெரியுமா